கவுகாத்தி: இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து கவுகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு ஆளான பாஜ எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிகாலம்,கடந்த மார்ச்சில் முடிவடைந்தது.இதையடுத்து தலைவர் தேர்தல் மே 7ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்தது. இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர்,தேர்தலை ஜூலை 11 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக கமிட்டித் தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா தெரிவித்தார். இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தேர்தலை எதிர்த்து அசாம் மல்யுத்த சங்கம் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.அதில், அசாம் மல்யுத்த சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கடந்த2014ம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்காத நிலையில் தேர்தலில் பிரதிநிதியாக யாரையும் நிறுத்த முடியாது. எனவே, தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்துள்ளது.