திருமலை: ஆந்திராவில் இருந்து ஒடிசாவிற்கு வெங்காய லோடு லாரியில் கடத்தி வரப்பட்ட 1,426 ஆமைகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் ஃபோகேஸ்பேட்டை சோதனைச்சாவடியில் வனத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது வெங்காய மூட்டைகள் இருந்தது. இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தியபோது 20 சாக்கு மூட்டைகளில் ஆமைகள் கடத்தப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், கோனசீமா மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் இருந்து ஒடிசாவிற்கு ஆமைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. இதில் 163 ஆமைகள் இறந்தது தெரியவந்தது. உயிருடன் இருந்த 1,426 ஆமைகளை மீட்டு வனப்பகுதியில் தண்ணீர் உள்ள இடத்தில் விட்டனர். ஆமைகளை கடத்தி வந்தவர்கள் கோர்ட்டில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.