மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க ஆண்டு இறுதியில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அப்படி, வரும் பயணிகள் இங்குள்ள ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி, புராதன சின்னங்களை ஜாலியாக சுற்றி பார்க்கின்றனர். இவர்கள், இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் பாரம்பரிய கலைகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகபடுத்தவும் ஒன்றிய சுற்றுலாத் துறையும், தமிழ்நாடு சுற்றுலா துறையும் இணைந்து கடந்த 1992ம் ஆண்டுமுதல், ஆண்டு இறுதியான டிசம்பர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதம் வரை இந்திய நாட்டிய விழாவை கோலாகலமாக நடத்தி வருகிறது. இத்திருவிழா, கடற்கரை கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய நாட்டிய விழாவை நடத்த தமிழ்நாடு சுற்றுலா துறை நிர்வாகம் ஆண்டுதோறும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று நடத்தி வருகிறது.
அதேபோல், இந்தாண்டும் இவ்விழாவானது நாளை மறுநாள் (22ம் தேதி) தொடங்கி, ஜனவரி 21ம் தேதி கோலாகலமாக நடைபெறயுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தினமும் பாரம்பரிய கலைகளான மங்கள இசை, கிராமிய கலை, பரத நாட்டியம், குச்சிப் புடி, கதகளி, ஒடிசி, ராஜஸ்தானி, பொம்மலாட்டம், மோகினியாட்டம், புரவியாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.