கொல்கத்தா: ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் சிஏஏ,தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை ரத்து செய்யப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. நாளை அங்கு முதல் கட்ட தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ) திரும்ப பெறப்படும்,தேசிய குடியுரிமை பதிவேடு ரத்து செய்யப்படும்,பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்.
* குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்படும்.
* தேசிய குடியுரிமை பதிவேடு ரத்து
* பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது
* தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தினசரி ₹400 ஊதியத்துடன் வேலை
* அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம்
* விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை
* தலித்,பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
* பெண்களுக்கான கன்னியா நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அந்த கட்சி வழங்கியுள்ளது.