சென்னை: தனியார் பேருந்துகளை விட அரசு பஸ்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் சிவசங்கர் கூறினார். பூந்தமல்லி புறவழி சாலை சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், ஓசூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: பூந்தமல்லி புறவழிச்சாலை சிறப்பு பேருந்து நிலையத்திலிருந்து மொத்தம் 586 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பொதுமக்களில் சிலர் சற்று புரிதல் இல்லாமல் அங்கு வந்தனர். அவர்களுக்காகவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
முதல் ஆண்டு என்பதால் மக்களுக்கு புரிதல் இல்லாமல் வந்திருந்தால் வரும் காலங்களில் அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகளில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை தனியார் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் கூட அரசு பேருந்து சேவையை பார்த்து அரசு பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்ப பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்து முன்பதிவு செயலிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த தகவலையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.