கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் பெட்டி, பெட்டியாக தங்க நகைகள் பிடிபட்டன.
வாகனத்தில் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்திருந்த நிலையில், அவற்றில் 45 பெட்டிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் இருந்தன. நகையை கொண்டு வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பிரபல நகை கடைக்கு தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்ததுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் ஓசூர் சார் ஆட்சியருடன் தேர்தல் அலுவலருமான பிரியங்கா மூலம் பெறப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.