சென்னை: தமிழ்நாட்டில் மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிலும் வரும் 20ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கும் அன்றைய தினம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளையில் இருந்து வரும் 21 ஆம் தேதி வரை கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் மிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மே 9ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 16.4 சென்டிமீட்டர் என்றும், ஆனால், 25.9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதன்படி, இயல்பிலிருந்து கூடுதலாக 58 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த 7 நாட்களில் இந்தியாவில் 13.3 சென்டிமீட்டர் மழை பதிவாக வேண்டும் என்றும் ஆனால், 14.1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் ஒட்டுமொத்தமாக இயல்பிலிருந்து 6 சதவீதம் கூடுதலாகும்.
இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து, வரும் 20ம் தேதி மத்திய மற்றும் தெற்கு கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கேரளாவின் சில மாவட்டங்களுக்கும் வரும் 18, 19, 20 ஆகிய நாட்களில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 18ஆம் தேதி மல்லபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 19ஆம் தேதி இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.