Saturday, May 18, 2024
Home » ஹிண்டன்பர்க் புகார் குறித்து விசாரணை தேவை: அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயராக இருந்த டெலாய்ட் நிறுவனம் வலியுறுத்தல்..!!

ஹிண்டன்பர்க் புகார் குறித்து விசாரணை தேவை: அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயராக இருந்த டெலாய்ட் நிறுவனம் வலியுறுத்தல்..!!

by Kalaivani Saravanan

டெல்லி: அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயராக இருந்த டெலாய்ட் நிறுவனம், ஹிண்டன்பர்க் புகார்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தியுள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயர் பொறுப்பிலிருந்து டெலாய்ட் நிறுவனம் அண்மையில் விலகியது. பொறுப்பிலிருந்து விலகுமுன், அதானி குழும நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க் கூறிய, புகார்களை விசாரிக்க டெலாய்ட் வலியுறுத்தியுள்ளது.

அதானி குழுமத்தின் நிதிநிலை அறிக்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஹிண்டன்பர்க் புகார்கள் உள்ளானவை என்று விசாரிக்கக் கோரியுள்ளது. எனினும், அதானி நிறுவனத்தின் நிதிநிலையை பாதிக்கும் வகையில் எந்தப் புகாரையும் ஹிண்டன்பர்க் கூறவில்லை என்று அதானி மறுத்துள்ளது. சுதந்திரமான வெளி கணக்காய்வு நிறுவனம் மூலம் ஹிண்டன்பர்க் புகார்கள் பற்றி விசாரிக்க டெலாய்ட் நிறுவனம் கோரியுள்ளது. செபியின் விசாரணை நடைபெற்று வருவதால் வெளி கணக்காய்வு நிறுவனம் மூலம் விசாரிக்கத் தேவையில்லை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

டெலாய்ட் 163 பக்க அறிக்கை தாக்கல்

அதானி போர்ட்ஸின் சட்டப்பூர்வ கணக்காயர் பொறுப்பிலிருந்து விலகியது ஏன் என்று விளக்கி டெலாய்ட் நிறுவனம் 163 பக்க அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. மும்பை பங்குச் சந்தை நிர்வாகத்திடம் 163 பக்க அறிக்கையை டெலாய்ட் ஆடிட் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து அதானி போர்ட்ஸ் வசூலிக்க வேண்டிய ரூ.2,457 கோடி குறித்து டெலாய்ட் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

மியான்மரில் அதானி போர்ட்ஸ் அமைத்து வரும் சரக்குப் பெட்டக முனையத்தை சோலார் எனர்ஜி நிறுவனத்துக்கு விற்பது பற்றியும், அதானி போர்ட்ஸுடன் தொழில் தொடர்பில் உள்ள அக்குழுமத்தின் இதர நிறுவனங்களை ஆய்வு செய்ய வாய்ப்பு தரப்படவில்லை என்றும் டெலாய்ட் தெரிவித்திருக்கிறது.

அதானி போர்ட்ஸ் விளக்கம்:

அதானி போர்ட்ஸின் சட்டப்பூர்வ கணக்காயரான டெலாய்ட் ஹஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் விலகியது குறித்து நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல் தம் குழுமத்தின் இதர நிறுவனங்களின் கணக்காயராக நியமிக்க டெலாய்ட் கோரியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் ஒவ்வொரு நிறுவனமும் சுயேச்சையானவை, தனி இயக்குநுர் குழுவைக் கொண்டுள்ளதாக அதானி போர்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அதானி குழுமத்தின் இதர நிறுவனங்களுக்கும் கணக்காயராக நியமிக்காததால் டெலாய்ட் விலகிவிட்டதாக அதானி கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

17 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi