புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்குமார்(25). கடந்த 2021ல் புதுக்கோட்டையில் மேக்ஸ் கேப்பிட்டல் என்ற பெயரில் நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். இதையடுத்து புதுக்கோட்டை, சென்னை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை வெங்கடேஷ்குமார் நேரில் சந்தித்து பங்குச்சந்தை தொழில் செய்து வருவதாகவும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 5 முதல் 8% வரை லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் நம்ப வைத்து அவர்கள் மூலமாகவும் சுமார் 120 பேரிடம் பணம் வசூலித்தார். இதில் புதுக்கோட்டையில் மட்டும் ரூ. 1.18 கோடி வரை வசூலித்துள்ளார்.சிலருக்கு சில மாதங்கள் லாப தொகை அளித்திருக்கிறார். மேலும் தனியார் விடுதியில் ஒரு விழா நடத்தி 2 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் தங்க நாணயம், எல்இடி டிவி பரிசாக வழங்கப்படும் என்று ஆசை காட்டியிருக்கிறார். சிலருக்கு தங்க நாணயம், டிவி பரிசளித்திருக்கிறார். இதனால் ஏராளமானோர் பணம் செலுத்தியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் குமார் முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தொகை தரவில்லை. அலுவலகத்தையும் மூடிவிட்டார். இது குறித்து முதலீடு செய்தவர்கள் கேட்டதற்கு, அவர் கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்தனர். மேலும் பல்வேறு காவல் நிலையங்களிலும் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேஷ்குமாரை தேடி வந்தனர். திருச்சியில் பதுங்கியிருந்த அவரை நேற்று கைது செய்தனர்.