சென்னை: காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ‘ஹெலிகாப்டர் சுற்றுலா’ அழைத்து செல்வதாக பொதுமக்களிடம் நூதன முறையில் மோசடி நபர்கள் பணம் பறிப்பதாக மாநில சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சைப்ர் க்ரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற சுற்றுலா தளம் மற்றும் புனித தளமான வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா அழைத்து செல்வதாகவும், அதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆன்லைனில் அதற்கான போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதை நம்பி பொதுமக்கள் ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட கோயில் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு ஆன்லைம் மூலம் பணத்தை கட்டுகின்றனர். அதன் மூலம் மோசடி நபர்கள், ஆன்லைன் மூலம் பணம் கட்டும் பொதுமக்களின் வங்கி விபரங்களை அறிந்து பணத்தை மோசடி செய்கின்றனர். மேலும், மோசடி நபர்கள் இந்திய தொலைபேசி எண்களை பயன்படுத்தி சட்டப்பூர்வ நிறுவனம் போல் காட்டி புனித சுற்றுலா தலங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தும், எந்த ஹெலிகாப்டரில் நாம் பயணம் செய்கிறோம் என்று கூறி பணத்தை நூதன முறையில் மோசடி செய்கின்றனர்.
பிறகு பணம் கட்டிய நபர்கள் சம்பந்தப்பட்ட நாள் அன்று ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தொடர்பு கொள்ளும் போது, மோசடி நபர்கள் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து ஏமாற்றி விடுகின்றனர். எனவே பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வரும் போலியான சுற்றுலா இணையதளங்களை நம்பி பணத்தை ஏமாற வேண்டாம்.
* நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும் மற்றும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டபூர்வமானதா என்று சரிபார்க்கவும்.
* பாதுகாப்பான இணையதளங்களுக்கான முகவரிக்கான பட்டியலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணையதளங்கள் உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும்.
* சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ள மின்னஞ்சல்கள், செய்திகளின் இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள். அப்படி செய்தால் தங்களின் வங்கி தரவுகள் அனைத்தும் திருடப்பட்டு பணம் மோசடி செய்ய வாய்ப்புகள் ஏற்படும்.
* பொதுமக்கள் இணைய தளம் மோசடி குறித்து தேசிய சைபர் க்ரைம் www.cybercrime.gov.in என்ற முகவரியில் புகார் அளிக்கலாம். பாதுகாப்பு குறிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் @tncybercrimeoff மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.