அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறி விலை குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் வருகிறது. இந்நிலையில் இன்று காலை மார்க்கெட்டுக்கு 650 வாகனங்களில் இருந்து 7000 டன் காய்கறிகள் வந்து குவிந்தன.
காய்கறி வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளி 7 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 12 ரூபாயிலிருந்து 10க்கும், சின்ன வெங்காயம் 35க்கும், பீன்ஸ் 100 ரூபாயிலிருந்து 40க்கும், கேரட் 60 ரூபாயிலிருந்து 20க்கும், கத்திரிக்காய் 25 ரூபாயில் இருந்து 20க்கும், அவரைக்காய் 60 லிருந்து 40க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் சவ்சவ் 25 ரூபாயில் இருந்து 15க்கும், வெண்டைக்காய் 25லிருந்து 20க்கும், முருங்ககாய் 25க்கும், முள்ளங்கி 10க்கும், முட்டைகோஸ் 8க்கும், புடலங்காய் 15க்கும், சுரைக்காய் 15க்கும், மாங்காய் 10க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மற்றும் மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, “கோடை காலத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை அதிகமாக இருக்கும். தற்போது காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை திடீரென குறைந்துள்ளது. கூடுதலாக விற்பனை செய்யப்பட்ட அனைத்து காய்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்” என்றார்.