Saturday, July 27, 2024
Home » பாஜவுக்கு விழுந்தது பலத்த அடி இந்தியா கூட்டணியை கைதூக்கிவிட்ட உ.பி.

பாஜவுக்கு விழுந்தது பலத்த அடி இந்தியா கூட்டணியை கைதூக்கிவிட்ட உ.பி.

by Ranjith

நாட்டின் அதிகமான மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப்பிரதேச மாநிலமே, ஒன்றியத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இங்கு பாஜ கடந்த 2014ல் 71 தொகுதிகளையும், 2019ல் 62 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் வலுவான பலத்துடன் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை உபியில் பாஜவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. 75 தொகுதியில் போட்டியிட்ட பாஜவுக்கு 32 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தள் 2 இடங்களில் போட்டியிட்டு 1 தொகுதியிலும், ராஷ்டிரிய லோக் தள் (ஆர்எல்டி) 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றன. ஓம் பிரகாஷ் ராஜ்பரின் எஸ்பிஎஸ்பி கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோற்றது. அதே சமயம், உபி இம்முறை இந்தியா கூட்டணிக்கு கைகொடுத்துள்ளது.

இங்கு இந்தியா கூட்டணியில் 62 தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி 33 தொகுதிகளிலும், 17 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதியையும் கைப்பற்றி உள்ளன. இதன் மூலம் உபியின் 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு 44 இடங்களும், பாஜ கூட்டணிக்கு 36 இடங்களும் கிடைத்துள்ளன.

பீம் ஆர்மி தலைவரான ஆசாத் சமாஜ் கட்சியின் சந்திரசேகர் நாகினா தொகுதியில் பாஜ வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். உபியில் பாதிக்கு பாதி தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கு கைமாறியதால் பாஜவின் கணக்கு கடுமையாக சரிந்தது.

* மண்ணை கவ்விய ஒன்றிய அமைச்சர்கள்
உபியில் பிரதமர் மோடி மற்றும் 11 ஒன்றிய அமைச்சர்கள் போட்டியிட்டனர். இதில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி (3,72,032), காங்கிரஸ் வேட்பாளரான காந்தி குடும்பத்தின் விசுவாசி கிஷோரி லாலிடம் (5.39.228) 1 லட்சத்து 67 ஆயிரத்து 196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதே தொகுதியில் கடந்த 2019ல் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை வென்று ஒன்றிய அமைச்சரானவர்.

சந்தோலி தொகுதியில் ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, முசாபர்நகர் தொகுதியில் ஒன்றிய வேளாண் மற்றும் உணவுத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண், ஜலான் தொகுதியில் ஒன்றிய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, மோகன்லால்கஞ்ச் தொகுதியில் ஒன்றிய வீடு மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் கவுசால் கிஷோர், பதேப்பூர் தொகுதியில் ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, கெரி தொகுதியில் ஒன்றிய வீட்டு வசதி வாரிய துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் தோல்வி அடைந்தார்.

* வருண்காந்திக்கு சீட் இல்லை மேனகாகாந்திக்கு வெற்றி வாய்ப்பு இல்லை
மக்களவை தேர்தலில் வருண்காந்திக்கு இந்த முறை பிலிபித் தொகுதியை ஒதுக்க பா.ஜ மறுத்துவிட்டது. ஆனால் அவரது தாயார் மேனகாகாந்திக்கு சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. பிலிபித் தொகுதியில் பா.ஜ வேட்பாளர் ஜிதின் பிரசாதா 1,63,589 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஆனால் சுல்தான்பூர் தொகுதியில் மேனகாகாந்தி 43 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் சமாஜ்வாடி வேட்பாளர் ராம்பவுல் நிசாத்திடம் பின்தங்கினார்.

* 2019ல் 4,79,505 2024ல் 1,52,513 வாரணாசியில் மோடியின் வாக்கு வித்தியாசம் குறைந்தது
உபி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை (4,60,457) 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்கு வித்தியாசத்தில் வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றார். ஆனாலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்ப சுற்றுகள் சிலவற்றில் பிரதமர் மோடி பின்தங்கியிருந்தது பாஜவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொகுதியில் இருந்து பிரதமர் மோடி 3வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவரது வாக்கு வித்தியாசம் கணிசமாக குறைந்துள்ளது, வாரணாசியிலேயே மோடிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 2014ல் நடந்த தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைவிட பிரதமர் மோடி 3,71,784 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். 2019ல் வாக்கு வித்தியாசம் 4,79,505 ஆக அதிகரித்தது. இந்த முறை வாக்குவித்தியாசம் ஒன்றரை லட்சமாக குறைந்துவிட்டது.

* அகிலேஷ் தம்பதி அசத்தல் வெற்றி
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உபி கன்னாஜ் தொகுதியில் 6,21,701 வாக்குகள் பெற்று 1,70,922 வாக்கு வித்தியாசத்தில் பாஜவின் சுப்ரத் பதக்கை வென்றார். அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரியில் போட்டியிட்டு 5,98,526 வாக்குகள் பெற்று 2,21,639 வாக்கு வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் ஜெய்வீர் சிங்கை வீழ்த்தினார். இவர்கள் உட்பட யாதவ் குடும்பத்திலிருந்து 5 பேர் போட்டியிட்டு ஐவரும் இம்முறை வென்றுள்ளனர். அசம்கரில் சமாஜ்வாடியின் தர்மேந்திர யாதவ், பிரோசாபாத்தில் ராம் கோபால் யாதவின் மகன் அக்‌ஷய் யாதவ், பதான் தொகுதியில் சிவ்பால் யாதவின் மகன் ஆதித்யா யாதவ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

* அயோத்தியில் பாஜ தோல்வி
அயோத்தி ராமர் கோயில் கட்டியதை மிகப்பெரிய சாதனையாக பாஜ பிரசாரம் செய்த நிலையில், அயோத்தி மாவட்டம் அடங்கிய பைசாபாத் தொகுதியில் பாஜ அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. அங்கு போட்டியிட்ட பாஜ வேட்பாளர் லல்லு சிங் (4,99,722) 54,567 வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாடியின் அவதேஷ் பிரசாத்திடம் (5,54,289) தோல்வி அடைந்தார். காஜிபூரில் மறைந்த பிரபல தாதா முக்தர் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரி சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு 1 லட்சத்து 22 ஆயிரத்து 94 வாக்கு வித்தியாசத்தில் பாஜவின் பராஸ் நாத் ராயை வீழ்த்தினார்.

* மாயாவதிக்கு மவுசு போச்சு
உபியின் முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உபியில் இம்முறை பலத்த அடி விழுந்துள்ளது. அக்கட்சி தனித்து போட்டியிட்ட 80 தொகுதியிலும் மண்ணைக் கவ்வி உள்ளது. கடந்த 2014ல் பாஜ உபியில் 71 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை. 2019ல் சமாஜ்வாடியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த மாயாவதி கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றியது. 2009ல் உபியில் 21 இடங்களைப் கைப்பற்றி தேசிய கட்சியாக அந்தஸ்து உயர்ந்த மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு சுத்தமாக மவுசு போய் விட்டது. அதன் வாக்கு சதவீதம் வெறும் 9.16க்கு சரிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

18 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi