லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதி எம்.பியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவ்னீத் சிங் பிட்டு பொறுப்பு வகித்து வருகிறார். லூதியானாவின் ரோஸ் கார்டனில் உள்ள ரவ்னீத் சிங் பிட்டுவின் வீட்டில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சந்தீப் சிங் என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் நேற்று தன்னிடம் இருந்த அதிநவீன க்ளோக் பிஸ்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பிஸ்டல் வெடித்தது. இதில் சந்தீப் சிங் கன்னத்தில் பாய்ந்த தோட்டா அவரது தலையை துளைத்து கொண்டு வந்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சந்தீப் சிங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.