நீலகிரி: கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கள்ளிக்கூடு செல்லும் கேரளா சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பந்தலூர், தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகளும், மரங்களும் விழுந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று கேரள மாநிலம் கள்ளிக்கூடு சாலையில் கனமழை காரணமாக மரம் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் 1 மணிநேரத்திற்கும் மேலாக போராடி விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
அதன் பின்னரே கேரளா நோக்கி செல்லும் வாகனங்களும், கேரளாவிலிருந்து கூடலூர் வந்த வாகனங்களும் இயல்பாக செயல்பட்டன. மேலும் இந்த சாலையியல் ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.