திருவொற்றியூர்: மணலி மண்டலக்குழு கூட்டம் மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்தினர். கவுன்சிலர் தீர்த்தி பேசும்போது, எனது வார்டில் விடுபட்டுள்ள பகுதியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
கவுன்சிலர் ஸ்ரீதர் பேசும்போது, சிபிசிஎல் நகர் அருகே விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்றார். இதற்கு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பதிலளித்து பேசுகையில், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மணலி ஏரியை தூர்வாரி கரை அமைத்து, நடைபாதை அமைக்க விரைவில் ரூ.4 கோடியே 60 லட்சம் பணிகளுக்கு டெண்டர் விடப்படும் என்றார். தொடர்ந்து ரூ.7 கோடியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.