Monday, June 17, 2024
Home » தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இன்று விசாரணை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: மாற்று வழியில் சென்று விமானத்தில் ஏறினார்

தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இன்று விசாரணை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: மாற்று வழியில் சென்று விமானத்தில் ஏறினார்

by Ranjith

சென்னை: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு, கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து, வரும் 20ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கவர்னர் ரவி அவசரமாக, நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்த பத்து மசோதாக்களையும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று முன்தினம் அவசரமாக கூடியது. அந்தக் கூட்டத்தில் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை 5:15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். கவர்னருடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். அப்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்த கவர்னர் ரவி, வழக்கமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 6வது கேட் வழியாக காரில் உள்ளே சென்று, விமானம் நிற்கும் இடத்தில் இறங்கி விமானத்தில் ஏறுவார். ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக திரிசூலம் விமான நிலைய உள்நாட்டு முனைய டெர்மினல் 1ல் அனைத்து வகை பயணிகளும் செல்லும் வழியாக சென்று விமானத்தில் ஏறினார்.

கவர்னரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, 6வது கேட் என்பது பாதுகாப்பு மிகுந்தது. விஐபிகளின் கார்கள் மட்டுமே அதன் வழியாக உள்ளே செல்ல முடியும். ஆனால் நேற்று கவர்னருடன் அவருடைய 18 வயது பேரன் ஒருவரும், டெல்லி செல்ல வந்தார். கவர்னரின் பேரனுக்கு 6வது நுழைவு வாசல் வழியாக செல்வதற்கு அனுமதி இல்லை. இதனால் கவர்னர் காரில் நேரடியாக பேரனுடன் உள்நாட்டு விமான நிலையம் வந்து, சாதாரண பயணிகளோடு விமானத்துக்குள் ஏறி சென்றார் என்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கவர்னர் ரவி இன்று காலை 10:30 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மீண்டும் சென்னை திரும்புகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செல்லும் கவர்னர், ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கவர்னர் மீது, தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கவர்னரின் இந்த திடீர் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi