Sunday, September 1, 2024
Home » கோவா ஓட்டல் அறையில் கொடூரம் 4 வயது மகனை கொலை செய்த பெண் அதிகாரி: பெட்டியில் சடலத்தை மறைத்து பெங்களூரு கொண்டு செல்லும் வழியில் சிக்கினார்

கோவா ஓட்டல் அறையில் கொடூரம் 4 வயது மகனை கொலை செய்த பெண் அதிகாரி: பெட்டியில் சடலத்தை மறைத்து பெங்களூரு கொண்டு செல்லும் வழியில் சிக்கினார்

by Karthik Yash

பனாஜி: கோவாவில் ஓட்டல் அறையில் 4 வயது மகனை கொலை செய்து, சடலத்தை பெட்டியில் மறைத்து பெங்களூருக்கு காரில் எடுத்துச் சென்ற தாய் போலீசில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சுசானா சேத் (39). பெங்களூருவில் உள்ள மைண்ட் புல் ஏஐ லேப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வெங்கடேஷ், கேரளாவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 4 வயதில் மகன் இருந்தான். இந்நிலையில், சுசானா சேத் தனது மகனுடன் கடந்த 6ம் தேதி கோவா சென்றுள்ளார்.

அங்கு கண்டோலிம் பகுதியில் உள்ள ஒரு சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் தங்கி உள்ளார். 2 நாள் தங்கியிருந்த அவர் நேற்று முன்தினம் அவசர வேலையாக பெங்களூரு செல்ல வேண்டுமெனவும், டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறும் அபார்ட்மென்ட் நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அதன்படி, டாக்ஸியில் சுசானா மட்டும் சென்றுள்ளார். மேலும் வழக்கத்திற்கு மாறான பெரிய அளவில் பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார். மகனுடன் வந்த சுசானா, தனியாக சென்றதாலும், பெரிய பெட்டியை எடுத்துச் சென்றதாலும் சந்தேகமடைந்த அபார்ட்மென்ட் நிர்வாகத்தினர், சுசானா தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு டவலில் ரத்தக்கறை இருந்தது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து, டாக்ஸி டிரைவரின் போன் நம்பரை வாங்கி பேசினர். அப்போது சுசானாவிடம் அவரது மகன் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது உறவினர் வீட்டில் மகனை விட்டுள்ளதாக கூறி முகவரி ஒன்றை கொடுத்தள்ளார். உடனடியாக போலீசார் அந்த முகவரிக்கு சென்ற விசாரித்த போது அது போலியானது என தெரிந்தது. இதனால் டாக்ஸி டிரைவருக்கு போன் செய்து, சுசானாவுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கொங்கனி பாஷையில் பேசிய போலீசார் காரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, டாக்ஸியை கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா போலீஸ் நிலையத்திற்கு டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் போலீசார், சுசானாவிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார், பெட்டியை திறந்து பார்த்து போது, 4 வயது சிறுவன் உள்ளே சடலமாக கிடந்துள்ளான். மகனை கொன்று அவனது சடலத்தை பெட்டியில் மறைத்து சுசானா எடுத்துச் சென்றது தெரியவந்தது. கொலை நடந்த இடம் கோவா என்பதால் சுசானாவை போலீசார் கோவா அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வரும் சுசானா கடந்த 2021ல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் நாட்டின் 100 சிறந்த பெண் தொழில்முனைவோரில் ஒருவராக விருது பெற்றவர். அப்படிப்பட்டவர் தனது மகனை கொடூரமாக கொன்று பெட்டியில் மறைத்து எடுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* கொலைக்கான காரணம்?
சுசானாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக போலீஸ் விசாரணையில் சுசானா கூறி உள்ளார். இது குறித்து கோவா வடக்கு போலீஸ் எஸ்பி நிதின் வல்சன் கூறுகையில், ‘‘குற்றவாளியை கைது செய்து முறைப்படி கோவா அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும். முதற்கட்ட விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்வதாக சுசானா கூறி உள்ளார். இருவரும் விவகாரத்து பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது கணவர் தற்போது இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ளார். அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* தற்கொலை முயற்சியால் ஏற்பட்ட ரத்தக்கறை
போலீசார் கூறுகையில், ‘‘சுசானா சேத், அவரது மகனை மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளார். அதன் பின் தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக மணிக்கட்டை கத்தியால் கீறி உள்ளார். அவரது ரத்தக் கறை தான் டவலில் விழுந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றார். மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதற்காக சுசானா கோவா வந்தாரா, மகனை கொன்ற பிறகு ஏன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருவதாக கூறி உள்ளனர்.

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi