கூடலூர்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த 1953, 1960ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தால், அவர்கள் அந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் இந்த நிலப்பதிவு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, நிலப்பதிவு சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, அந்த மசோதாவை அம்மாநில கவர்னர் ஆரிப் முகமதுகானின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். கவர்னரின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் சார்பில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததால், மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களான தேக்கடி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் சிரமம் அடைந்தனர்.