தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு, அந்த கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதா? பாஜவுடன் கூட்டணி வைப்பதா? என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, பாமக மற்றும் தமாகா கட்சியின் தலைவராக உள்ள அன்புமணி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் அதிமுக தயவால் மாநிலங்களவை எம்பியாக உள்ளனர். இதனால் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
அதே நேரத்தில் பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பாஜ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடியை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது, எடப்பாடியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இழுக்க தூதுவிட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அன்புமணியை ஜி.கே.வாசன் சந்தித்து பேசி உள்ளார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், பாஜ கூட்டணியில் பாமகவை இணைக்க பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது.