திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் ரூ.150-க்கு விற்பனையான கனகாம்பரம் தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நாளை முகூர்த்த நாள் என்பதாலும், நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்பதாலும் தமிழ்நாடு முழுவதும் மலர் சந்தைகளில் போக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மலர் சந்தையில் கடந்தவாரம் ரூ.150-க்கு விற்பனையான கனகாம்பரம் தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்தவாரம் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.500-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ ரூ.200 லிருந்து ரூ.800-க்கும், ஜாதிப் பூ ரூ.250-லிருந்து ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.