சென்னை: சென்னை- மும்பை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் எடுப்பத்தில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் 3 பெண்கள் மயக்கமடைந்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. சென்னை – மும்பை இடையே வரும் 6ம் தேதி நடைபெறும் போட்டிக்கு, டிக்கெட் விற்பனை நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வழக்கத்தை விட ரசிகர்கள் டிக்கெட் வாங்க நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மைதானம் அமைந்துள்ள கவுன்டர் முன் காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும், ரசிகர்கள் ஒரே நேரத்தில் கவுன்டர் முன்பு கூடியதால் கூச்சல் குழப்பம் நிலவியது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஒரு கட்டத்தில் தடுப்புகள் உடைத்து கொண்டு ரசிகர்கள் ஓடி வந்ததால், டிக்கெட் வாங்க வரிசையில் நின்று இருந்த 3 பெண்கள் கூட்டத்தில் சிக்கி மயக்கமடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 3 பெண்களை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதைதொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்,லேசாக ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை சீர்படுத்தினர். இதற்கிடையே மாற்றுத்திறனாளிகள் எங்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என்று மைதானம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது. அதைதொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.