டெல்லி: பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெறுப்பு பேச்சு காரணமாக மோடி போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கக்கோரி ஜோன்டேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என ஜோன்டேல் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் கடந்த 9ம் தேதி பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் நேற்று விசாரிக்கப்பட இருந்த நிலையில், மனுவை விசாரிக்க இருந்த நீதிபதி திடீர் விடுப்பில் சென்றதால் வழக்கு விசாரணை இனத்திரையை தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மோடியின் பேச்சுக்கள் முற்றிலும் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தனர்.