சென்னை: பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காததால், ரியல் எஸ்டேட் அதிபரை அவரது அலுவலகத்திற்குள் புகுந்து மண்டையை உடைத்த நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ெசன்னை நெற்குன்றம் பல்லவன் நகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன்(48). இவர் ரியல் எஸ்டேட் அதிபராகவும் எல்ஐசி ஏஜெண்டாகவும் பணியாற்றி வருகிறார். முரளி கிருஷ்ணன் கூறியதன் படி அவரது நண்பரான துவாரகேஷ் என்பவரிடம் நடிகை ராதா 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.90 ஆயிரம் ‘பிட் காயின்’ முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீடு செய்த நாளில் இருந்து எந்த பணத்தையும் துவாரகேஷ் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அறிமுகம் ெசய்து வைத்த முரளிகிருஷ்ணனிடம் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தர கோரி நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், சூளைமேடு பெரியார் பாதை பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் முரளி கிருஷ்ணன் இருந்துள்ளார். அப்போது பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை பெற்று தர கோரி நடிகை ராதா மற்றும் அவரது தாய் பவானி, மகன் தருண் மற்றும் 3 பேர் வந்துள்ளனர். வெகு நேரம் பணம் தொடர்பாக பேசி கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதும், நடிகை ராதா, அவரது தாய் பவானி, மகன் தருண் ஆகியோர் ரியல் எஸ்டேட் அதிபர் முரளி கிருஷ்ணனை கீழே தள்ளி சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் முரளி கிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பிறகு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் முரளி கிருஷ்ணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் மூன்று தையல் போடப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் அதிபர் முரளி கிருஷ்ணன் வடபழனி காவல் நிலையத்தில் பிட் காயின் முதலீடு தொடர்பாக தன்னை நடிகை ராதா மற்றும் அவரது தாய், மகன் உள்ளிட்டோர் கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரின் படி வடபழனி போலீசார் நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.