புதுடெல்லி: நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கேத்ரினா கைப், கஜோல் ஆகியோரின் போலியான ஆபாச விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி இத்தகைய டீப் ஃபேக் விடியோக்கள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதள நிறுவனங்களுடன் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் ஆழமான போலி ஆபாச விடியோக்கள் பற்றி புகாரளிக்க தனி இணையதளத்தை உருவாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதில் போலி ஆபாச விடியோக்கள் குறித்து எப்படி தெரிவிப்பது, புகாரளிப்பது என்பது பற்றி ஆலோசனை அளிக்கப்படும். இதுபோன்ற விடியோக்களை பதிவிட்ட நபர் மீதும், அதை வௌியிட்ட சமூக வலைதள நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதள நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறுவதை இனி பொறுத்து கொள்ள முடியாது. அந்த நிறுவனங்கள் பயன்பாட்டு விதிகளை 7 நாட்களுக்கு மாற்றி அமைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.