திருப்பூர், நவ.25: திருப்பூர் பின்னலாடைத் துறை இளைஞர்களுக்கான திறன் சார்ந்த தொழில் பயிற்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது. ஒன்றிய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் திறமையான மனித வளத்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில் நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இவை தொழில் துறைக்கு அதிக உற்பத்தி மற்றும் மேலாண்மை மற்றும் மேற்பார்வை திறனை வழங்குகிறது. மேலும் தொழில் துறையினருக்கு உற்பத்தியை அதிகரிக்க மட்டுமல்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மண்டலத்தில் பின்னலாடைத் துறை சார்ந்த தையல் இயந்திர ஆபரேட்டர், மெர்சண்டைசிங் பயிற்சி என மொத்தம் 1,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் வரும் 27ம் தேதி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகிக்கிறார். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.