வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியகுரும்ப தெருவைச் சேர்ந்தவர் பவானிசங்கர். இவர் கமலா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், குழந்தை இல்லாத காரணத்தினால், திம்மம்பேட்டை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். பவானிசங்கர் மற்றும் இந்திராணிக்கு பாலாஜி என்ற மகனும் பேபி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பவானிசங்கர் இறந்துவிட்டார்.
தொடர்ந்து, அவரது இரண்டாவது மனைவி இந்திராணி மற்றும் மகன் பாலாஜி ஆகியோர் சேர்ந்து பவானி சங்கரின் சொத்துக்களுக்கு நாங்கள் இருவர் மட்டுமே வாரிசு எனக்கூறி, முதல் மனைவி கமலா மற்றும் இரண்டாம் மனைவியின் மகளான பேபி ஆகியோரை வாரிசாக சேர்க்காமல் போலி வாரிசு சான்று பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வாரிசு சான்றிதழை பயன்படுத்தி பவானிசங்கரின் சொத்துக்களை இந்திராணி மற்றும் பாலாஜி இருவரும் தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த பவானி சங்கரின் முதல் மனைவி கமலா வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன்பேரில், 2019ம் ஆண்டு வாணியம்பாடி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவரும், தற்போது மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியராக இருப்பருவமான கீதாராணி, துணை வட்டாட்சியராக இருந்து ஓய்வு பெற்ற ரகுராம கிருஷ்ணன், வாணியம்பாடியில் சார்-பதிவாளராக இருந்த கார்த்திகேயன் உட்பட 13 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.