தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று இரவு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது: அமமுக சுயமாக உருவானது. ஆனால் கொள்ளையடித்து பண மூட்டைகளை வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி கம்பெனி, நமது நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தை கூறி விலைக்கு வாங்கி அரசியல் ரீதியாக ஓரம் கட்டி விட்டோம். அழித்து விட்டோம். ஒழித்து விட்டோம். தூண்கள் எல்லாம் சரிந்து விட்டது என தகவல்களை பரப்புகிறார்கள். அவர்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழிகாட்டிய படி இந்த இயக்கம் மக்களுக்கான பணியை தொடர்ந்து மேற்கொள்ளும். இங்கு தானாக கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வீழ்த்த முடியாது. ஒரு கோடி ரூபாய் செலவு செய்தாலும் கூட எடப்பாடி பழனிச்சாமி கம்பெனியால் இந்த கூட்டத்தை கூட்ட முடியாது. துரோகத்தை மட்டுமே கொடுத்த அந்த கூட்டம் இப்போது ஆட்டம் போடுகிறது. இந்த ஆட்டத்தை தமிழக மக்கள் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய தேர்தல் தான் வரக்கூடிய நாடாளுமன்றத்தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.