புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்பி கலந்து கொண்டு பேசுகையில், பாஜ அடிமை ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். மீண்டும் ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தாலோ, புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வெற்றிபெற்றாலோ புதுவையின் யூனியன் பிரதேச அந்தஸ்து குறைந்துவிடும். முதல்வர் பதவியே இருக்காது, முதல்வர் ரங்கசாமி நகராட்சிக்கு மேயராகிவிடுவார். மாநில அரசுகளை ஒன்றிய பாஜ அரசு, நசுக்கி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை பாஜ சிதைக்கிறது.
அன்றைக்கு வாஜ்பாய் அரசாங்கத்தில் இந்த புதுச்சேரிக்கு முதன்முதலாக ஒரு ஒன்றிய கேபினட் அமைச்சர் பதவியை பெற்று தந்தது எம்ஜிஆர். புதுச்சேரி எம்பியாக இருந்த பாலா பழனூருக்கு கேபினட் அமைச்சர் பதவி தரப்பட்டது. இது புதுச்சேரிக்கான பெருமை’ என்றார். அதிமுகவை சேர்ந்த பாலா பழனூர் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தது 1979ம் ஆண்டு. எம்ஜிஆர் மறைந்தது 1987ம் ஆண்டு. வாய்பாய் பிரதமராக இருந்தது 1996ம் ஆண்டு (13 நாட்கள்), 1998 முதல் 1999 வரை (13 மாதங்கள்), 1999 முதல் 2004 வரை. வரலாறு இவ்வாறு இருக்க வாஜ்பாய் காலத்தில் ஒன்றிய கேபினட் அமைச்சர் பதவியை வாங்கி தந்தது எம்ஜிஆர் என்று சி.வி.சண்முகம் உளறி உள்ளார்.