சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் பணியாற்றிய 3 மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களை சிறப்பிக்கும் வகையில் 2022ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.சஜீவனா, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.தர் ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.
அதேபோன்று தமிழ்நாடு வனத்துறை வரலாற்றில் முதன்முறையாக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வன அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கும் வகையில், 2022-23ம் ஆண்டுக்கான வளங்குன்றா வனமேலாண்மை நடவடிக்கைகளை சிறப்பாக முறையில் மேற்கொண்டதற்கான விருதை வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் எஸ்.ஆனந்த், மனிதவள உயிரின மோதல்கள் மேலாண்மை நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டதற்கான விருதை ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பாகன் ஜெக்தீஸ் சுதாகர், வன உரிமைச்சட்ட நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டதற்கான விருதை கன்னியாகுமரி மாவட்ட வன உயிரின காப்பாளர் எம்.இளையராஜா ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.