சென்னை: சென்னை தி.நகரில் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விசிக மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில் மணியனை மாம்பலம் காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரிய மனு ஏற்கனவே தள்ளுபடியான நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணியன் சார்பில் தமது பேச்சுக்கு மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் மணியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மணியனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை சார்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அதில், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலையில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.