Thursday, May 9, 2024
Home » இங்கிலாந்து 353 ரன் குவிப்பு சோயிப் பஷிர் சுழலில் இந்திய அணி திணறல்: ஜெய்ஸ்வால் அரை சதம்

இங்கிலாந்து 353 ரன் குவிப்பு சோயிப் பஷிர் சுழலில் இந்திய அணி திணறல்: ஜெய்ஸ்வால் அரை சதம்

by Dhanush Kumar

ராஞ்சி: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் 106 ரன் (226 பந்து, 9 பவுண்டரி), ராபின்சன் 31 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்தது.

அரை சதம் அடித்த ராபின்சன் 58 ரன் எடுத்து (96 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ஜடேஜா சுழலில் விக்கெட் கீப்பர் ஜுரெல் வசம் பிடிபட்டார். ஜடேஜா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சோயிப் பஷிர், ஜேம்ஸ் ஆண்டர்சன் டக் அவுட்டாக, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன் குவித்து ஆல் அவுட்டானது (104.5 ஓவர்). அந்த அணி 6 ரன்னுக்கு கடைசி 3 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 122 ரன்னுடன் (274 பந்து, 10 பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வால் – கேப்டன் ரோகித் இணைந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 2 ரன் மட்டுமே எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் ஃபோக்ஸ் வசம் பிடிபட, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. எனினும், ஜெய்ஸ்வால் – கில் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 82 ரன் சேர்த்தது.

கில் 38 ரன், பத்திதார் 17, ஜடேஜா 12 ரன், ஜெய்ஸ்வால் 73 ரன் எடுத்து (117 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) இளம் சுழல் சோயிப் பஷிர் (20 வயது) பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சர்பராஸ் கான் 14 ரன், அஷ்வின் 1 ரன் எடுத்து ஹார்ட்லி பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, இந்தியா 55.2 ஓவரில் 177 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், துருவ் ஜுரெல் – குல்தீப் யாதவ் இணைந்து உறுதியுடன் போராடினர். இவர்களைப் பிரிக்க இங்கிலாந்து தரப்பு மேற்கொண்ட முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்துள்ளது. ஜுரெல் 30 ரன், குல்தீப் 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சோயிப் பஷிர் 4, ஹார்ட்லி 2, ஆண்டர்சன் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 3 விக்கெட் இருக்க, இந்தியா இன்னும் 134 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi