Tuesday, May 14, 2024
Home » மூதாட்டி கொலை வழக்கில் ஒருவர் கைது தனியாக வசிப்பவர்களை கொன்று கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்: 45 சவரன், ரூ.2 லட்சம் பறிமுதல்

மூதாட்டி கொலை வழக்கில் ஒருவர் கைது தனியாக வசிப்பவர்களை கொன்று கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்: 45 சவரன், ரூ.2 லட்சம் பறிமுதல்

by Karthik Yash
Published: Last Updated on

ஆலந்தூர்: ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர், 12வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் பல்லாவரத்தில் நிறுவனம் ஒன்றை நடத்த வருகிறார். இவரது மனைவி பானுமதி எல்.ஐ.சி.யில் பணிபுரிந்து வருகிறார் இவர்களுடன் ஸ்ரீராமின் தாயார் சிவகாமிசுந்தரியும் (81)வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி ஸ்ரீராமும், பானுமதியும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கணவன், மனைவி இருவரும் அன்று மாலை பணி முடித்து வீட்டிற்கு வந்தனர். அப்போது சிவகாமிசுந்தரி தூங்கிக்கொண்டிருப்பதாக நினைத்து எழுப்பாமல் இருந்தனர். பீரோ திறந்து கிடந்ததால் அதில் பார்த்தபோது, பணம், நகைகள் மாயமாகியிருந்தன. உடனடியாக தாயை எழுப்ப முயன்றபோது, அவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது பழவந்தாங்கல் பகுதி நோக்கி ஓடி, பின் திரும்பிவந்தது. முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி காலை 11 மணி அளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. அந்த வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்ததில் கையில் குடை பிடித்தபடி ஒரு ஆசாமி வீட்டிலிருந்து வெளியே ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்.

அவர் எங்கு சென்றார் என்பதை தொடர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த ஆட்டோ கே.கே. நகர் நோக்கி சென்றதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த ஆட்டோ டிரைவரிடம், சிசிடிவியில் குடைபிடித்து செல்லும் நபரின் படத்தை காண்பித்ததும், தான்தான் அந்த நபரை ஆட்டோவில் ஏற்றி வந்ததாக கூறி அந்த ஆசாமியின் வீட்டை அடையாளம் காட்டினார். இதனையடுத்து போலீசார் கொலையாளியை பிடித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில், கே.கே.நகரை சேர்ந்த சக்திவேல் (37) என்றும், இன்டீரியர் தொழில் செயது வந்த தனக்கு போதிய வருமானம் இல்லாதாதால் வயதான மூதாட்டிகளை கொலை செய்து நகை பணம் கொள்ளை அடிக்கும் தொழிலில் ஈடுபட்டதாகவும், ஆதம்பாக்கத்தில் தனியாக இருந்த சிவகாமிசுந்தரியை நான்தான் கழுத்தை இறுக்கி கொலை செய்து, பணம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றேன், என தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தீவிர விசாரணையில், கடந்த 2021ல் கே.கே.நகரை சேர்ந்த தனியாக வசித்து வந்த சீதாலட்சுமி என்பவரையும் இதேபோல் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பணம், நகைகளை கொள்ளை அடித்துவிட்டு, அதில் சிக்காமல் இருந்தது தெரியந்தது. மேலும், வேறு ஏதாவது கொள்ளையில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரிடமிருந்து 45 சவரன் தங்கநகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

You may also like

Leave a Comment

14 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi