தண்டையார்பேட்டை: கோயம்புத்தூர், திருவனந்தபுரம், வேலூர், ஏலகிரி, சேலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து பராமரிப்பு பணி முடிந்து மீண்டும் இங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினின் முன்பக்க 6 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. நல்லவேளையாக, சுதாரித்துக்கொண்ட டிரைவர் ரயிலை நிறுத்தி பெரும் விபத்து ஏற்படாமல் தடுத்தார். இதை தொடர்ந்து மற்ற ரயில்கள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாற்று பாதையில் இயக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் பேசின்பிரிட்ஜ் பணிமனையில் 3 ரயில்கள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு உள்ளன. இதில் சரக்கு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடங்கும். அடிக்கடி பேசின்பிரிட்ஜ் பணிமனையில் ரயில் தடம் புரளும் சம்பவம் பயணிகள் இடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.