பூந்தமல்லி: பூந்தமல்லியில் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுரேஷ் மகன் கார்த்திகேயன்(18). இவர், பூந்தமல்லி ராஜா அக்ரஹாரம் தெருவில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில், 2 நண்பர்களுடன் தங்கி, பூந்தமல்லி அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், இவரது நண்பர்கள் நேற்று வெளியே சென்ற நிலையில், கார்த்திகேயன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது நண்பர்கள் வந்து கதவை நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கார்த்திகேயன் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு, பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.