அதிமுகவுடன் முக்கிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வராத நிலையில், மாநிலம் முழுவதும் போட்டியிட முன்னணி நிர்வாகிகளும் முன்வராமல் ஒதுங்கிக் கொண்டார்கள். இதனால் டப்பு உள்ள பார்ட்டியா பார்த்து, பொறுக்கி எடுத்து வேட்பாளராக அறிவித்திருக்கிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளரில் ஒருவர்தான், அவரோட சொந்த ஊரான சேலம் அதிமுக வேட்பாளர் விக்னேஷ்.
சமீபத்தில் கட்சியில் சேர்ந்த அவருக்கு ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் பொறுப்பை முதலில் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். பிறகு அவரோட சொந்த ஊரில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார். தற்போது வேட்பாளராக அறிவித்து, பிரசாரத்தையும் தொடங்கி வைத்துள்ளார். நேற்று காலை, பெரியசோரகை சென்றாய பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, கோயில் அருகில் உள்ள வீதிகளில் அதிமுக வேட்பாளர் விக்னேசுக்கு வாக்குகள் எடப்பாடி சேகரித்தார்.
எடப்பாடியை பார்த்ததும் கட்சியை சேர்ந்த பெண்கள், ஆரத்தி தட்டுகளோடு வந்திருந்தனர். அவர்கள், எடப்பாடி பழனிசாமிக்கும், வேட்பாளர் விக்னேசுக்கும் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்தனர். உடனே வேட்பாளர் விக்னேஷ், தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க, பாக்கெட்டிற்குள் கையை விட்டார். இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி ‘‘ஏய் ஏய் பணத்தை எடுக்காத…’’ எனக்கூறியபடி கையை தட்டிவிட்டு, முறைத்துப் பார்த்தார். பிறகு அந்த பெண்கள் கையில் துண்டு பிரசுரத்தை கொடுத்துவிட்டு சென்றனர்.
சிறிது தூரம் சென்ற நிலையில் வேட்பாளர் விக்னேசிடம், ‘‘இனி பாக்கெட்டில் பணத்தை வைச்சிக்காத.. பாக்கெட்டில் பணம் இருக்கவே கூடாது. விளையாட்டு பிள்ளை மாதிரி பண்ணாத.. கூட இருக்கிறவங்க நல்லா பார்த்துக்கோங்க, பாக்கெட்டில் பணம் இருக்கக்கூடாது,’’ என எச்சரிக்கை விடுத்தார். இதனை பார்த்த கட்சிக்காரங்க, ‘விளையாட்டு பிள்ளையை வேட்பாளரா நிறுத்துனா, அப்படி விளையாட்டுத்தனமா தான் நடந்துக்குவான்’ என கலாய்த்து தள்ளினர்.
அனுபவம் மிக்க செம்மலை கூட இருக்கும்போது, 31 வயதான விக்னேசை வேட்பாளராக அறிவித்துவிட்டு, இப்படி நிற்க வேண்டியிருக்கு. இந்த தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போறோமோ என நிர்வாகிகள் அவர்களுக்குள்ளாக கமெண்ட் அடித்துக்கொண்டார்களாம்.