நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த நாடாளுமன்ற தேர்தல் அதிமுகவுக்கு பெரும் சவால் வாய்ந்த தேர்தலாக உள்ளது. எனவே அனைவரும் கருத்துவேறு பாடின்றி உழைக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பழநியில் இருக்கும் சாமிக்கு விரதம் இருந்து எப்படி உங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். அது போல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு விரதம் இருந்து கங்கணம் கட்டிக்கொண்டு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
பழநியில் இருக்கும் சாமி, நமது பொதுச்செயலாளர் பழனிச்சாமி என்று வேறுபாடு பார்க்க கூடாது. எனவே பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று பேசுங்கள். ஒருமுறைக்கு 3 முறை பேசுங்கள். கடந்த காலங்களை விட வாக்குகளை கூடுதலாக பெற வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக உழைத்தால் வெற்றி எளிதாக பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.