சத்தியமங்கலம்: கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி மாயமான கோவையை சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை அன்னூர் அடுத்த வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர்கள் ராக்கிமுத்து (45), சிவக்குமார் (35) மற்றும் ராஜேந்திரன் (35). நண்பர்களான 3 பேரும் நெசவு தொழில் செய்து வந்தனர். 3 பேரும் பைக்கில் பவானிசாகர் பூங்காவுக்கு நேற்று வந்தனர். திரும்பும் வழியில், சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் சாலையில் எரங்காட்டூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளித்தனர். பாசனத்திற்காக தற்போது 2300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
வாய்க்காலின் நடுவில் ஆழமான பகுதிக்கு சென்ற, ராக்கிமுத்து, சிவக்குமார் ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் கூச்சலிட்டார். அதற்குள் 2 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், வாய்க்காலில் இறங்கி தேடினர். அவர்கள் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.தகவலறிந்து பவானிசாகர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் 2 தொழிலாளர்களின் உடலையும் தேடும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.