திருமலை: திருப்பதி மலைப்பாதையில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் மரத்தில் மோதி நின்றது. திருமலையில் இருந்து திருப்பதிக்கு நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்த அரசு பஸ் திடீரென முதலாவது மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக மலைப்பாதையின் வளைவில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தாலும் சாலையின் வளைவில் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழாமல் அங்கு இருந்த தடுப்பு சுவர் மீது ஏறி மரத்தில் மோதி நின்றது.
அதனால் அதில் பயணம் செய்த அனைவரும் நிம்மதி அடைந்தனர். பஸ்சில் 10 பேர் மட்டுமே இருந்த நிலையில் 2 பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மரம் இல்லாவிட்டால் பஸ் மலைப் பாதையில் வளைவில் சுமார் 10 அடி ஆழத்திற்கு விழுந்திருக்க நேரிடும் என அதில் பயணம் செய்த தேவஸ்தான ஊழியர்களும் பக்தர்களும் தெரிவித்தனர்.