புதுடெல்லி: மாநிலங்களவை எம்பியாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட 12 பேர் நேற்று பதவியேற்றனர். 33 ஆண்டுகள் எம்பியாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விடைபெற்றார். மாநிலங்களவையில் 54 எம்பிக்களின் பதவிக்காலம் நேற்று மற்றும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் 49 பேர் நேற்று முன்தினமும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 5 பேர் நேற்றும் ஓய்வு பெற்றனர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவரான மன்மோகன் சிங் 1991ம் ஆண்டு முதல் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக இருந்தவர் ஆவார்.
இந்நிலையில், மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 12 எம்பிக்கள் நேற்று பதவியேற்றனர். மபியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 12 உறுப்பினர்களுக்கும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றவர்களில் 7 பேர் பாஜ, 3 பேர் காங்கிரஸ், 2 பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள்.