சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக பைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவதூறு பரப்புவதாக கூறி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வழக்கு கொடுத்திருந்தார். திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை கூறியதாகவும், அவரது கருத்துகள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இதன்பின் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 14ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை நேரில் ஆஜரானார். தொடர்ந்து, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் நேற்று மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜரானார்.