சென்னை: அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் 9ம் தேதி பல்லவன் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கிடவும். போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிடவும். 100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் பண பயன்களை உடனடியாக வழங்கிடவும் திமுக அரசை வலியுறுத்தி அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் வருகிற 9ம் தேதி (திங்கள்) பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் அலுவலகம் முன்பு, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையிலும், அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையிலும் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கலந்துகொள்ள வேண்டும்.