புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 12 ம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அதில், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் இரட்டை இலை சின்னத்தை எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதைத்தவிர சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “ தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சூரியமூர்த்தி அனுப்பிய மனுவுக்கு பதிலளிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், கடந்த 12ம் தேதி சூர்யமூர்த்தி தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலை விவகாரம் குறித்து அனுப்பிய மனு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தங்களுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதனால், இரட்டை இலை சின்னம் பறிபோகுமா? என்று அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது.