*பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களிலிருந்து பெருநகர பகுதிகளுக்கு பணிக்காக மக்கள் புறப்பட்டதால், நேற்று பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் தீபாளி பண்டிகை நேற்று முன்தினம் (12ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை கொண்டாட வெளிமாநிலம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதுமட்டுமல்லாமல் ரயில்கள் மூலமாகவும், ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு வந்தனர். பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். தீபாவளி விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதனையடுத்து, அவர்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு கார்கள், பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் திரும்பினர், பெரும்பாலான மக்கள் பஸ்களில் சென்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, வேலைக்காக கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்திற்கு சென்றவர்கள் தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தனர். புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி சொந்த ஊரில் கொண்டாடினர். விடுமுறை முடிந்ததால், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, திருப்பூர், கோவையில் வேலை செய்கிறவர்கள் குடும்பத்துடன் நேற்று புறப்பட்டனர். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பெற்றோர் உதவியுடன் புறப்பட்டனர். இதனால், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட பஸ்களில் ஏறி சென்றனர். தர்மபுரி, மொரப்பூர், பொம்மிடி ரயில்நிலையங்களில் நின்று செல்லும் ரயில்களில் ஏறி மக்கள் சென்றனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, தர்மபுரி பஸ்நிலையத்தில் பயணிகள் முண்டியடித்து பஸ்சில் இருக்கை இடம் பிடித்தனர். சேலம், பெங்களூரு, சென்னை மார்க்கமாக சென்ற பஸ்களில் ஒருசில நிமிடத்தில் இருக்கைகள் நிரம்பின. தீபாவளி பண்டிகையொட்டி தர்மபுரி மண்டலத்தில் இருந்து 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்மபுரி, பெங்களூரு, சென்னை மார்க்கமாக அதிக பஸ்கள் இயக்கப்பட்டன. தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சீர் செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பயணிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டத்திற்கு ஏற்ப பஸ்கள் தேவையான இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பெங்களூரு, சென்னை, சேலம் மார்க்கமாக அதிக பஸ்கள் இயக்கப்பட்டன,’ என்றனர்.