கோத்தகிரி : உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தளம் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக கொடநாடு காட்சிமுனை உள்ளது. இந்த காட்சி முனையை கண்டு ரசிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
இங்கு உள்ள ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளையும் அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
அதேபோல் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். கொடநாடு பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குளுகுளு காலநிலை நிலவியது. அப்போது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லை பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவில் உருவான அடர்ந்த வெண் படலம் சூழ்ந்த அடர்ந்த மேகமூட்டங்கள் மலைகளின் மீது தவழ்ந்து செல்வதை சுற்றுலா பயணிகள் மெய் மறந்து வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்த ரம்மியமான காட்சிகளை செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.