டெல்லி : விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பு சம்மந்தமும் இருந்தால் 6 முதல் 18 மாதங்கள் வரையிலான கட்டாய காத்திருப்பு இனி தேவையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குடும்பநல நீதிமன்றங்களில் நடைபெறும் நீண்ட கால விசாரணையை தவிர்த்து இரு தரப்பு சம்மதமும் இருந்தால் உடனடியாக விவாகரத்து தர முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி மீள முடியாத திருமண முறிவுகளில் இரு தரப்பும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற விரும்பினால் 6 முதல் 18 மாதங்கள் வரையிலான கட்டாய காத்திருப்பு காலம் தேவையில்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டத்தில் உள்ள கட்டாய காத்திருப்பு என்ற அம்சத்தில் இருந்து விலக்கு அளித்துள்ள உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. திருமண முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் பரஸ்பர சம்மதம் இருந்தாலும் நேரடியாக உயர் நீதிமன்றத்தையோ உச்சநீதிமன்றத்தையோ நாடி விவாகரத்து பெற முடியாது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தற்போது உள்ள சட்டப்படி, முதலில் குடும்ப நல நீதிமன்றத்தை நாட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.