சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், 2022 ஜூலை 17ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயக்குமாரையும், துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்துள்ளதாக சபாநாயருக்கு கடிதம் அனுப்பியும், தொடர்ந்து ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் விவாதங்களில் தலையிடுவதால், கட்சியினரால் திறமையாக செயல்பட முடியவில்லை. எனவே, கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும். இருக்கையை மாற்றியமைக்குமாறும் சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.