ஷாஹ்தோல்: மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஹ்டோல் மாவட்டத்தில் அமரர் ஊர்தி கிடைக்காததால் ஒரு குடும்பம், சடலத்தை 15 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றது. மத்தியபிரதேச மாநிலம் ஷாஹ்டோல் மாவட்டம் துர்வார் கிராமத்தை சேர்ந்தவர் லாலுய்யா பைகா(56). உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலுய்யா பைகா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். அவரது உடலை மருத்துவமனையில் இருந்து 15 கிமீ தூரம் உள்ள துர்வார் கிராமத்திற்கு எடுத்துச்செல்ல அமரர் ஊர்தி வழங்கப்படவில்லை. இதையடுத்து இரண்டு பேர் சடலத்தை தங்கள் நடுவில் வைத்துக்கொண்டு பைக்கில் எடுத்துச்சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.