திருப்பூர், நவ.28: திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) அமைந்துள்ளது. இங்கு தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு, உரிமம், தரச்சான்றிதழ் புதுப்பிக்கும் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் 8 போட்டு காட்டுதல் போன்றவை நொச்சிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் இடத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தர ஆய்வு மற்றும் பரிசோதனைக்காக வந்து செல்வதால் தினமும் நெருக்கடியாக காணப்படுகிறது.
மேலும் தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் இடம் தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திணறுகின்றனர். இந்நிலையில், தெற்கு ஆர்டிஓ அலுவலகம் புதிதாக கட்டப்படுவதற்கான இடம் சுண்டமெடு பகுதியில் தேர்வு செய்யப்பட்டது. பின்பு உரிமம் கிடைக்காததால் அதன் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே, விரைவாக ஆர்டிஓ அலுவலகத்திற்கான இடத்தை தேர்வு செய்து அனைத்து வசதிகளும் கூடிய பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.