கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு இசை கற்றுக்கொடுக்கும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகளுக்கு கைத்தொழில், கட்டிட பணிகள் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகள் மூலம் அவர்கள் சிறையில் இருந்து தண்டனை முடிந்து வெளியே செல்லும்போது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த தொழில்கள் பயன்படும் என்ற முயற்சியில் சிறைத்துறை பயிற்சிகளை அளிக்கிறது.
தற்போது புதிய முயற்சியாக கடலூர் மத்திய சிறையில் இசை கற்றுக்கொள்ளும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 15 கைதிகள் ஆர்வமுடன் இசையை கற்று வருவதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாடல்களை கற்றுக்கொள்வதோடு மட்டுமின்றி ஒலி பெருகி மூலமாக இவர்கள் பாடும் பாடல்களை கேட்பது சக கைதிகளுக்கும் பொழுதுபோக்காக அமைகிறது. சிறை நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.