சென்னை:சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு தலைமையில் அமைக்கப்பட்ட ‘சட்டமன்ற நாயகர்-கலைஞர்’ குழுவானது தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவ, மாணவிகளை உள்ளடக்கிய கருத்தரங்கம் ஒன்றை நடத்தலாம் என முடிவு செய்துள்ளது. கலைஞர் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கும் சட்டமன்றத்தின் மூலம் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்த்திய சாதனைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் 21ம் தேதி (இன்று) மதியம் 12 மணிக்கு ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் சட்டமன்றத்தின் வாயிலாக செய்த சாதனைகளில் ஈர்த்தது’ என்ற தலைப்பின் கீழ் முதல் கருத்தரங்கம் சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ‘சட்டமன்ற நாயகர்-கலைஞர்’ விழாக்குழு உறுப்பினர்கள், இந்நாள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.